Saturday, April 3, 2010

சிந்தனைக்கதை: இரத்தின மோதிரம்

ஒருமுறை ஒரு திருடன் ஒரு மகாத்மாவின் வீட்டில் திருடச் சென்றான்.திருடன் மிகவும் ஏழை. அவனும், அவனது குடும்பத்தினரும் சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன. அவனது நிலையை அறிந்து கொண்ட மகாத்மா திருடனை நோக்கி, "சும்மா நேரத்தை வீணாக்காதே. அலமாரியில் என் மனைவியின் விலை மதிப்புள்ள மோதிரம் இருக்கிறது. என் மனைவி உன்னைப் பிடிப்பதற்கு முன் அதை எடுத்துக் கொண்டு விரைவாக இங்கிருந்து ஓடிவிடு." என்றார். திருடனால் இதை நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்ட அவன், தான் கேட்டது உண்மையே என்று உறுதி செய்து கொண்டபின் அலமாரியை நோக்கி நடந்தான். அதிலிருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினான். அப்போது மகாத்மாவின் மனைவி அங்கு வந்தாள். மோதிரம் திருட்டுப் போய்விட்டது என்பது புரிந்ததும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். "ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள என் இரத்தின மோதிரத்தை யாரோ திருடி விட்டார்கள் " என்றாள். "அது அவ்வளவு விலை மதிப்புள்ளது என்று எனக்குத் தெரியவில்லையே!" என்று வியந்தார் மகாத்மா . உடனே திருடனின் பின்னால் ஓடினார். திருடனுக்கு முன்னால் சென்று நின்ற அவர், "நீ திருடிய மோதிரம் ஐயாயிரம் ரூபாய் விலை மதிப்புள்ளது. இதை நீ குறைந்த விலைக்கு விற்று விடாதே. இதைச் சொல்லவே உன் பின்னால் ஓடி வந்தேன்." என்றார்.
திருடனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவன் தனது வாழ்வில் இதுவரை இது போன்ற அன்பை அனுபவித்ததில்லை. அந்த ஒரு நிமிடத்தில் அவனது வாழ்வே மாறிவிட்டது. அவன் நன்னடத்தை உள்ள மனிதனாக மாறி உழைத்து வாழ ஆரம்பித்தான்

No comments:

Post a Comment