Wednesday, March 23, 2011

விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது. பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது.

Saturday, March 12, 2011



இறைவன் துன்பமயமான உலகைப் படைத்தவர் கொடியவர் என்று சிலர் நினைக்கிறார்கள். பணக்காரர்கள் சொகுசாக வாழும்போது மற்றவர்கள் வறுமையில் வாடுவது நியாயமா என்று பலர் வருந்துகிறார்கள். இதுவா கடவுளின் கருணை? என்று பலரும் மனம் நொந்து கொள்கின்றனர்.உண்மையில் கடவுள் சோதனைகளை மட்டுமே கொடுக்கும் கொடியவர் அல்ல. அவர் கருணை வடிவானவர். நியாயமான ஆசைகளைக் கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு கடவுளின் கருணை என்றைக்கும் உண்டு. பேராசை கொண்டு அலையாதீர்கள். தர்மநெறிமுறைகளை பின்பற்றி சத்திய வழியில் நடப்பவர்களை கடவுள் நிச்சயம் கரைசேர்க்க தவறுவதில்லை. வேகத்துடன் எதையும் அணுகாதீர்கள். விவேகத்தை வளர்த்துக் கொள்வது பலவழிகளில் நமக்குத் துணை செய்யும். "அம்மா' என்று ஆண்டவனின் திருப்பாதங்களை சரண்புகுந்து நீயே எனக்குத் துணை என்று கூக்குரல் எழுப்புங்கள். உன்னையன்றி எனக்கு யார் துணை என்று மன்றாடுங்கள். அம்பாளின் மனம் உருகி நிச்சயம் உங்களை தனதாக்கிக் கொள்வாள். எது நமக்கு வாழும் வகை என்பதை பல ரிஷிகள் நமக்கு போதித்துச் சென்றிருக்கிறார்கள். அவ்வழிகளை பின்பற்றினால் வாழ்க்கை மேன்மை பெறும்.

Tuesday, March 1, 2011

வாழ்க்கை தத்துவம்




சிவபெருமானின் கழுத்திலுள்ள விஷம் குறிப்பது அமுதம், விஷம் என்பவை இன்ப, துன்பங்கள்.வாழ்க்கை எனும் பாற்கடலைக் கடையும் போதும் இத்தகைய அனுபவங்கள் வரலாம். இன்பத்தை ஏற்றுக்கொண்டு இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். துன்பம் வரும் போது துவண்டுவிடாமல் இறைவனை வழிபட்டு அவனருளால் அதைக் களைய வேண்டும். இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள அசுரர்கள் போன்ற தீயவர்கள் வருவார்கள். அவர்களையும் இனம் கண்டு அப்புறப்படுத்த வேண்டும்.
காளையின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடி இறைவன் காட்சி கொடுக்கிறார் என்பது - சகல உயிர்களையும் நாம் போற்ற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. சிவபெருமானின் தலையில் இருக்கும் சந்திரன் வளர்பிறையாகவும், தேய்பிறையாகவும் தோன்றுவது- நம்முடைய வாழ்வில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் என உணர்த்துகிறது.
சிவபெருமானின் தலையில் கங்கை இருக்கிறதே- அது எப்போதும் நாமனைவரும் தூய்மையான, குளிர்ச்சியான மனத்துடன் இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது. அவரது கழுத்தைச் சுற்றி இருக்கும் பாம்பு - எப்போதும் நாம் பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்பதை உணர்த்துகிறது. சிவபெருமான் புலித்தோல் அணிந்திருப்பது- மனிதன் ஒருபோதும் மிருக உணர்ச்சிக்கு ஆட்படக்கூடாது என்பதைப் போதிக்கிறது. கையில் சூலம் ஏன் என்று கேட்பீர்களே? அது மனிதன் தன மனதிலுள்ள ஆசை, கோபம், பொறாமை, ஆணவம் போன்ற எதிரிகளை சூலத்தைக்கொண்டு அழிக்க வேண்டும் என்பதை சொல்கிறது.
இறை சொரூபத்தின் ஒவ்வொரு அடையாளமும் வெறும் கற்பனைகள் என்று நினைக்காதீர்கள். அவை மனிதனுக்கு வாழ்வியலை உணர்த்தும் அரிய பாடங்கள்.
என்ன சந்தேகம் தீர்ந்துவிட்டதா??