Wednesday, December 28, 2011



பக்தனின் இயல்புகள் 
நான் இறைவனின் தொண்டன், அவரே அனைத்தையும் செய்பவர். நான் அவரது கருவி என்ற எண்ணம். 
இறைவனையும்,  குருவையும்  பலனை அதிர்பாராமல் நேசித்தல். அந்த அன்பில் தகாத நோக்கம் இருப்பதில்லை. அந்த பக்தி ஆசையோடு கூடியதல்ல, அது தத்துவபூர்வமானதாகும். 
எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் அனைவரையும் நேசித்தல்.
தனக்கு தீங்கு செய்பவர், தன்னை வெறுப்பவர் உள்பட அனைவரும் நலமுடன் வாழ வேண்டுமென்று பிரார்த்தித்தல்.
பிறரிடமுள்ள குறைகளைப் பாராமல், நல்லவற்றை மட்டும் பார்க்க முயற்சித்தல். 
குரு கூறுவதற்கேற்ப உள்ளத்தாலும், உடலாலும் கீழ்ப்படிவதன் மூலம் குருபக்தியை வெளிப்படுத்துதல். 
இறைவனின் வருகையை எதிர்பார்த்து, தான் வசிக்கும் இடத்தை எப்பொழுதும் தூய்மையாகவும், நேர்த்தியாகவும், சீராகவும் வைத்திருத்தல். 
இடைவிடாத ஜபத்தால் மனதை தூய்மைப்படுத்த முயற்சித்தல்.
பக்தியோடும், மன ஒருமுகப்பாட்டோடும் பஜனை பாடுதல். ஒவ்வொரு செயலையும் இஷ்ட தெய்வத்தின் ஆராதனையாக செய்தல்.
தனது கவலைகளை இறைவனிடம் மட்டுமே கூறுதல். 
எந்தச் சூழ்நிலையிலும், தினசரி ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஆத்ம சாதனைகளுக்காக பயன்படுத்துதல்.
புறத்தில் நிகழும் செயல்கள் தனக்கு சாதகமாக இல்லாத போதும், பிரார்த்தனைகளையும், ஆன்மீக சாதனைகளையும் கைவிடாமல் இருத்தல்.
எதையும் தன்னுடையதென்று உரிமை பாராட்டாமல் இறைவனுக்கு சொந்தமானவை என்று கருதுதல். 
மேற்கூறியவை அனைத்தும் ஒரு சிறந்த பக்தனுக்குரிய இயல்புகள். அவற்றைக் கடைப்பிடித்து  வாழ்வை மேம்படுத்திகொள்வோம்.

Tuesday, December 13, 2011


உலகப் பொருள்களிலிருந்தும், புலன் இன்பங்களிலிருந்தும் பெறும் அற்ப சுகங்கள், நமக்குள் விளங்கும் ஆத்மசொரூபத்தின் எல்லையற்ற பேரின்பத்தின் பிரதிபலிப்பாகும்.       உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அம்சம். நாம் ஒருவரை ஒருவர் "ஓம் நமசிவாய' என கூறி வணங்கும் போது ""உங்களுக்குள் இருக்கும் இறைவனை வணங்குகிறேன், அந்த இறைவன் மீது எனக்கு அன்பும் மரியாதையும் இருக்கின்றன'' என்று அவரிடம் கூறுவதாகப் பொருள்.

Saturday, December 3, 2011

மனதை ஒருமுகப்படுத்தி கண்களை மூடி, அம்பிகையின் திருநாமத்தை உச்சரியுங்கள். அப்போது அவளது உருவம் உங்களுக்கு தெரியும். அவ்வாறு உருவம் தெரியாவிட்டால் அவள் எதிரே நிற்பதாக எண்ணிக்கொண்டு, `அம்மா!' என்று ஆசையுடனும், மனதில் பக்தியுடனும் அழையுங்கள். உங்களது குரலுக்கு அம்பிகை நிச்சயம் காட்சி தருவாள். `அம்மா' எனும் வார்த்தைக்கு `நிலையான அன்பே, நிலையான கருணையே, நீ என்னை வழி நடத்துவாயாக!' என்று பொருள்.