Wednesday, April 28, 2010

சிந்தித்துச் செயற்படுங்கள்.
சிந்தனையின் மூலமே நாம் வாழ்வில் எதையும் பெறுகிறோம். பாத்திரத்தைக் கழுவுதல் என்ற சாதாரண சிறிய செயல் முதல் சந்திரனில் இறங்குதல் என்ற மிகப் பெரிய செயல் வரை நம்மால் செய்ய முடிகிறது எனில் அதன் ஆரம்பம் ஒரு சிந்தனையிலாகும். எந்த ஒரு கலைப்படைப்பும் கலைஞனின் மனதில் தோன்றும் சிந்தனையில் தான் உருக்கொள்கிறது. சிந்தனைகளின் சக்தி எல்லையற்றது. ஆனால் வெறும் சிந்தனை மட்டும் போதாது. நம்மால் நாள் முழுவதும் அமர்ந்து சிந்திக்க முடியும். பல தினங்கள் மனதில் ஒரு விஷயத்தை பாவனை செய்ய முடியும். இதனால் மட்டும் அந்த சிந்தனை, அந்த பாவனை உண்மையாகி விடுமா? சிந்தனைகளை செயலாக வடிவமைக்க வேண்டும். கர்மமோ, சிந்தனையோ தனியாகச் செயல்படுவதால் பயனில்லை. நமது ஒவ்வொரு செயலும், சிந்தனையால் வழிநடத்தப்படவேண்டும். அப்போதுதான் பலன் விளையும்.
தீயால் வீட்டுக்கூரையையும் எரிக்கலாம், உணவும் தயாரிக்கலாம். தீயை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. நல்ல சிந்தனையிலிருந்து நல்ல செயல் பிறக்கிறது. அது நல்ல பலனை அளிக்கிறது. தீய சிந்தனை தீய செயலுக்குக் காரணமாகிறது. அது தீய பலனை அளிக்கிறது. நல்ல சிந்தனையும், நற்செயலும் இணையும் இடத்திற்கு இறை அருள் வந்து சேரும். அதனால் நல்லதையே சிந்தியுங்கள், நன்றாகச் செயற்படுங்கள். அதுதான் வெற்றியை அடைவதற்கான ராஜபாதையாகும்.

Monday, April 26, 2010

ஆன்மீகம் என்பது உலக சுகங்களை எல்லாம் அனுபவித்து முடித்த பின், நடப்பதற்குக்கூட இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தவர்களுக்குரியது என நவீனகால மனிதன் கருதுகிறான். அது உண்மையல்ல. வாழ்வில் சுகமும், துக்கமும் வரும்போது அவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் அதாவது அதிகம் மகிழவோ, சோர்ந்து வருந்தவோ செய்யாமல் இரண்டையும் சமநோக்கோடு ஏற்றுக்கொண்டு மன அமைதியுடன் வாழ்வதற்கு உதவுவதே ஆன்மீகமாகும். ஆன்மீகத்திற்கு செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும் வீணாவதில்லை. அது நிலையான வைப்புக் கணக்கு போன்றது. உலக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும் இறைவனை சிந்திக்கவும், ஜப தியானங்கள் செய்யவும் சிறிது நேரத்தையாவது செலவிடுங்கள்.

Friday, April 23, 2010

இறைவனை அடைக்கலமடையாத வாழ்க்கை, நீதிபதி இல்லாமல் இரு சட்டத்தரணிகள் வாதாடுவது போன்றதாகும். வாதம் எந்த முடிவையும் அளிக்காது. வாதத்திற்கு தீர்ப்பு எழுத வேண்டுமெனில் நீதிபதி தேவை. நீதிபதி இல்லாமல் வாதம் நடந்தால், வாதத்தைத் தொடரலாமே அன்றி தீர்ப்பு அளிக்க முடியாது. இறை குணங்கள் நம்மிடம் வளர்வதற்காகவே இறைவனை வணங்குகின்றோம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் இறைவன் என்பது மெய்ப்பொருளாகும். அந்த மெய்ப்பொருளை நாம் ஏற்றுக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் அதற்கு ஒரு குறையும் ஏற்படாது. புவியீர்ப்பு சக்தி உண்மையாகும். அதை நாம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், அது இல்லாமல் போவதில்லை. அதே சமயம் அதை மறுத்து, உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போது ஏற்படும் விபத்தின் மூலம் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். இதுபோல உண்மைக்கு எதிரான முகத்தைத் திருப்பிக்கொள்வது, கண்களை மூடிக்கொண்டு "இருட்டு" என்று கூறுவதாகும். இறைவன் என்ற மெய்ப்பொருளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை முறைப்படுத்துவதன் மூலம் அல்லல் அற்ற வாழ்க்கை வாழ முடியும்.

Thursday, April 22, 2010

"லோகா சமஸ்தா: ஷுகினோ பவந்து" நமது முன்னோர்களான ரிஷிகள் தந்துள்ள மந்திரம் இது. இந்த மந்திரம் நமக்கும், நம் குடும்பத்திற்கும் மட்டும் உரியதல்ல. இவ்வுலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.


Tuesday, April 20, 2010

Sunday, April 18, 2010

குண்டலினி சக்தி


குண்டலினி சக்தி என்பது எல்லா உயிரினங்களிலும் இருக்கும் ஜீவசக்தி ஆகும்: இது முதுகெலும்பின் அடிப்பாகத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்பாம்பைப் போன்றது. இடைவிடாத தியானத்தாலும், குருவின் அருளாலும் இச்சக்தி விழிப்படைகிறது. அப்போது அது முதுகெலும்பில் உள்ள கழுமுனை நாடி வழியாக தலையில் இருக்கும் ஷஹஸ்ராரத்தில் உள்ள ஆண்பம்பைக் காணும் ஆவலில் மேலெழுந்து செல்கிறது. யோகத்தினால் ஏற்படும் உள்ளுணர்வின் வாயிலாக இதை அனுபவிக்கலாம். குண்டலினி சக்தி ஒரு ஆதாரத்தை அடைந்த பிறகு அந்த ஆதாரத்தை நன்றாக மலரச் செய்து செம்மைப்படுத்தி அடுத்த ஆதாரத்திற்கு செல்கிறது. குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரத்தை அடையும் பொழுதும் சாதகன் பல விதமான அனுபவங்களைப் பெறுகிறான். தெய்வீகமான அனுபவங்களும், ஆசையைத் தூண்டிவிடும் அனுபவங்களும் ஏற்படும். ஒரு சற்குருவின் மேற்பார்வை இல்லாத சாதகன் இந்த நிலைகளை மிக உயர்ந்தது, கடவுள் காட்சி கிடைத்துவிட்டது என்று தவறாக எண்ணி ஆன்மீகப் பாதையிலிருந்து வழுவலாம். இதனால்தான் சற்குருவின் கண்காணிப்பு ஒரு சாதகனுக்கு மிக அவசியம் என்று கூறப்படுகிறது.
குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரங்களின் வழியாக மேலெழும்போது உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் முழுவதும் மிளகாயை அரைத்துத் தேய்த்தது போன்ற எரிச்சல் ஏற்படும். உடலில் அதிகமான வெப்பம் தோன்றும். அடிக்கடி மயிர்க்கூச்சல் எடுக்கும், வேர்வை கசிவது போல் உடலிலிருந்து நீர் கசியும், உடம்பு துரும்பாக இளைத்து விடும். இந்நிலையில் சாதகன் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மிகவும் கவனமாக அவன் கண்காணிக்கப்படவேண்டும். நேரான வழவழப்பான பலகையில் படுக்க வேண்டும். ஒரு சிறு அடி கூட படக்கூடாது. அது பெரிய கெடுதலை ஏற்படுத்தும். குண்டலினி சக்தி விழிப்பு அடைந்துவிட்டால் சாதகன் மிகவும் பொலிவு பெறுவான். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களைக் கடந்து குண்டலினி கடைசியாகத் தனது உண்மை இருப்பிடமான ஷஹஸ்ராரத்தை அடைகிறது. அப்போது உடலில் புத்துணர்வு ஏற்பட்டு, உடல் முழுவதும் குளுமையும், அமுத மழையும் பொழிகிறது. பழைய உடல் ஆன்மீக சக்தி நிறைந்த புதிய உடலாக மாறுகிறது.

Saturday, April 17, 2010

Friday, April 16, 2010

Wednesday, April 14, 2010


மனச்சாட்சியே மனிதனுக்கு நீதியையும் நேர்மையையும் போதிக்கிறது. தனி மனிதனின் எல்லா நோக்கங்களையும், குறிக்கோள்களையும் உணர்ந்து, ஆராய்ந்து எச்சரிக்கிறது. அதன் எச்சரிக்கையை பின்பற்றாவிட்டாலோ புறக்கணித்தாலோ அதன் எச்சரிக்கை நின்றுவிடுகிறது. மனச்சாட்சி உங்களிடமிருந்து முற்றாகவே விலகிவிடுகிறது. மனச்சாட்சி இல்லாவிட்டால் வாழ்வில் வெற்றிபெற முடியாது.
ஐம்புலன்களை ஆதாரமாக வைத்துத்தான் மூளை வெளியுலக தொடர்புகளை பெறுகிறது. எனினும் புலன்களை எப்போதும் நம்பிவிடக்கூடாது. அவற்றையும் விவேகம், மனச்சாட்சியால் நெறிப்படுத்த வேண்டும்.


Tuesday, April 13, 2010



புத்தாண்டு பிறந்துள்ளது. புதுவருடப் பிறப்பு என்பது நம் மனங்களில் உற்சாகமும், எதிபார்ப்பும் நிறைகின்ற சமயமாகும். வருடம் மாறியதால் மாற்றம் ஏற்பட்டுவிடாது. மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் நாமும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் நமது எதிபார்ப்புகள் நிறைவேறும். அனைவரும் முயற்சி செய்து முன்னேறுவதாக இவ்வருடம் அமையட்டும். சுற்றுப்புறமே ஆனந்தம் நிறைந்ததாக மாறட்டும். சென்ற வருடத்தைவிட சிறிதாவது ஒரு நல்ல குடும்பத்தை, ஒரு நல்ல நாட்டை உருவாக்க நம் அனைவருக்கும் இயலட்டும். அம்மாவின் குழந்தைகள் அன்பு மற்றும் அமைதியின் செய்தியை தாங்கிச் செல்லட்டும். அனைவரின் வாழ்விலும் அமைதியும் சந்தோசமும் நிறைய அம்மா பரமாத்மாவிடம் பிரார்த்திக்கிறேன்.*******அம்மா*******

Monday, April 12, 2010

உறங்கும் விழிகள் உலகத்தைக் காண்பதில்லை. மயங்கும் மனம் ஆன்மாவை அறிவதில்லை.

ஒவ்வோர் உயிரிலும் தெய்வசக்தி உள்ளது. மானிடத்தில் தெய்வசக்தி மறைந்திருப்பதை ஞானியர் அறிவர். அவர்களுடைய ஆழ்ந்த தியானம் அதைக் காட்டும்.

மனிதன் ஒளியைத் தேடும் இன்னொரு ஒளி.

படிக்கிறவனுக்கு பத்து எண்ணங்கள், பார்க்கிறவனுக்கு நூறு எண்ணங்கள், அனுபவிக்கிறவனுக்கோ ஆயிரமாயிரம் எண்ணங்கள். ஆனால் தியானிக்கிறவனுக்கோ ஒரேயொரு எண்ணம்தான்.

. ஆன்மா மிகச்சிறிய ஒளிப்பொறி அது தொட்டுணரக் கூடியதோ கண்டறியக் கூடியதோ அல்ல.

Sunday, April 11, 2010

சிந்தனைக்கதை:எத்தனை பேர்?

ஒருநாள் ஒட்டகக் குட்டி ஒன்று தனது தந்தையைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்டது. "அப்பா, நம் முதுகில் திமில் இருப்பதன் காரணம் என்ன?"
"மகனே! அதில் சேர்த்து வைக்கப்படும் கொழுப்பானது நாம் பாலைவனங்களில் சஞ்சரிக்கும் போது நமது உடல்நிலையைப் பேண உதவுகிறது."
"நல்லது தந்தையே! நமது கண்களின் மீது மிக நீண்ட இமைகள் இருப்பதன் கரணம் என்ன?"
"பாலைவனத்தில் மணல்க்காற்று வீசும் போது மணல்துகள்கள் நம் கண்களில் விழுந்துவிட வாய்ப்புண்டு. நீண்ட கண் இமைகள் நாம் இதனால் குருடாகிவிடாமல் காக்க உதவுகின்றன."
"நன்றி தந்தையே! நமக்கு பரந்து விரிந்த சதையுள்ள கால்கள் இருக்கக் காரணம் என்ன?"
"பாலைவனத்தில் உள்ள மணல் மிகவும் மென்மையானது. அதில் கால்கள் புதைந்துவிடாமல் நடக்க இவை உதவுகின்றன."
இந்த பதில்களால் வியப்பிலாழ்ந்த குட்டி ஒட்டகம் தந்தையைப் பார்த்து கேட்டது "மிகவும் நன்றி தந்தையே! அப்படியானால் இந்த மிருகக்காட்சிச்சாலையில் நாம் என்ன செய்கிறோம்?"
மனிதர்களாகிய நாம்;  நமது தெய்வீக இயல்பை அறிந்து கொள்வதற்கான எல்லா வழிகளையும் அறிந்திருக்கிறோம்.     ஆனால்   நமது விருப்பு, வெறுப்பு என்ற கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறோம். விடுதலையை வேண்டுவோர் எத்தனை பேர்?!

Friday, April 9, 2010

மனோபாவம்

ஒருமுறை மருத்துவர் ஒருவர் கிராமத்திற்குச் சென்று, மது அருந்துவதால் விளையும் தீமைகளைத் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் தீர்மானித்தார். கிராமத்திலிருந்த குடிகாரர்களை ஒன்றாகக் கூட்டினார். அவர்களுக்கு மதுவால் விளையும் தீமைகளைக் குறித்து உணர்த்த பலவற்றைக் கூறிப் பார்த்தார். தனது முயற்சி நினைத்த அளவு பலனளிக்கவில்லை என்பதை அறிந்து, ஒரு பரிசோதனையின் மூலம் புரியவைக்கத் தீர்மானித்தார். அவர், இரண்டு கண்ணாடிக் குப்பிகளை எடுத்தார். ஒன்றில் சுத்தமான தண்ணீரையும் இரண்டாவதில் சாராயத்தையும் நிறைத்தார். பின்னர் ஒரு மண்புழுவை எடுத்து தண்ணீர் நிறைந்த குப்பியில் போட்டார். அந்த மண்புழு நீரில் அங்குமிங்கும் நீந்தி மகிழ்ந்தது. மற்றொரு மண்புழுவை எடுத்து சாராயம் இருந்த குப்பியில் போட்டார். அது ஒருமுறை துடித்தது; பின்னர் பல துண்டுகளாயிற்று. கடைசியில் அது பொடிப்பொடியாகி மறைந்தது. உடல் கரைந்து போயிற்று. அனைவரும் இதைக் கண்டு பேச்சிழந்து அமர்ந்திருந்தனர். மது அருந்துவதால் விளையும் தீமைகளைக் குறித்து இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என மருத்துவர் கருதினார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி, "இந்தப் பரிசோதனையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?" என்று கேட்டார். உடனே, குடிமயக்கத்தால் நேராக நிற்கக் கூட முடியாத ஒரு குடிகாரன் எழுந்து நின்று உரத்த குரலில், "எல்லோரும் குடியுங்கள்! பார்த்தீர்களா, குடித்தால் வயிற்றிலுள்ள புழுவெல்லாம் செத்துவிடும்" என்றான்.

குழந்தைகளே! கேட்கும் விடயத்தை சரியாகப்புரிந்துகொள்ளக் கூடிய களங்கமற்ற மனமே தேவை. களங்கமற்ற தூய இதயம் இருந்தால் அனைத்திலும் நல்லதைக் காண முடியும்.

Thursday, April 8, 2010



ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கே உரிய தனிச் சிறப்பு உண்டு. பாரதத்தின் சிறப்பும், உயர்வும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாகும். எடுப்பதில் அல்ல, கொடுப்பதில் தான் இன்பம்; அடைவதில் அல்ல; துறப்பதில் தான் ஆனந்தம் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து ஓதிய அவதாரங்களும், மகான்களும், ரிஷிகளும், முனிவர்களும் தோன்றிய புனித பூமி இது.
பாரதம் ரிஷிகளின் நாடு. உலகிற்கு எந்தக் காலத்திலும் நன்மையையும், புகழையும் அளிக்கும் பண்பாட்டையே ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். அந்தப் பண்பாடே நமக்கு அன்னை. அதை நாம் காப்பாற்றி வளர்க்க வேண்டும். "மாத்ரு தேவோ பவ (அன்னையைத் தெய்வமாக மதி) பித்ரு தேவோ பவ (தந்தையைத் தெய்வமாக மதி) ஆசார்ய தேவோ பவ (குருவைத் தெய்வமாக மதி) என்பதே நமது முன்னோர்கள் நல்கிய உபதேசம். இந்த அன்பு தான் சமூகத்தை ஒன்றாக இணைக்கும் சங்கிலி. அந்த சங்கிலி இன்று உடைந்து ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தீவாக மாறும் காட்சியையே நாம் இன்று கண்டு வருகிறோம்.
நம்முடைய பண்பாடும், நமது தாய்நாடும் நமக்கு அன்னை ஆவாள். அந்தப் பண்பாட்டுடன் நமக்குள்ள உறவை இழந்தால் நாம் நூலறுந்த பட்டம் போலாகி விடுவோம். பண்பாட்டை வளர்ப்பதும் தாய்நாட்டிற்கு சேவை செய்வதும் நம் அனைவரதும் தர்மமாகும். பண்பாட்டையும் தர்மத்தையும் வளர்ப்பதன் மூலம் அமைதியும், செழிப்பும் நிறைந்த ஒரு நாட்டை, ஒரு உலகத்தை உருவாக்க நம்மால் முடியும். இயற்கையின் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.

Tuesday, April 6, 2010

♥♠♥ சிந்தனைக்கதை: இதய மலர் ♥♠♥

ஒரு பக்தன் நிறைய ஆப்பிள், திராட்சை, மற்றும் பலவித பலகாரங்களை எல்லாம் வாங்கி பூஜை அறையில் வைத்தான். பிறகு இறைவனை நோக்கி, " இறைவா! நான் உனக்காக எதையெல்லாம் வாங்கி வந்திருக்கிறேன் என்று பார்த்தாயா? இப்போது உனக்கு திருப்தி தானே?" என்று கேட்டான்: உடனே ஒரு குரல்; "இல்லை, எனக்கு இது ஒன்றும் திருப்தியைத் தரவில்லை" என்றது.
"இறைவா, உனக்கு திருப்தியை அளிப்பது எது என்று சொல். நான் அதை வாங்கி வருகிறேன்" என்றான் பக்தன். " இதய மலர் என்று ஒரு மலர் இருக்கிறது ; அதுதான் எனக்கு மிகவும் விருப்பமானது" என்றார் இறைவன். பக்தன் "அது எங்கே கிடக்கும்" என்று கேட்டான். "மிகவும் அருகிலுள்ள வீட்டில் கிடைக்கும்" என்றார் இறைவன். பக்தன் உடனே அடுத்த வீட்டிற்குச் சென்று விசாரித்தான். ஆனால் அவர்களுக்கு அப்படி ஒரு மலரைக் குறித்து எதுவுமே தெரியவில்லை. அந்த மலரைத் தேடி அவன் அந்தக் கிராமத்திலிருந்த எல்லா வீடுகளுக்கும் சென்றான். அனைவரிடமிருந்தும் ஒரே பதில்தான் கிடைத்தது " அப்படி ஒரு மலரைக் குறித்து நாங்கள் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை" என்று. சோர்வடைந்த பக்தன் பகவானிடம் திரும்பிச் சென்று சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து "இறைவா! என்னை மன்னிக்க வேண்டும்; நான் இந்தக் கிராமம் முழுவதும் தேடினேன். ஆனால் நீ சொன்ன அந்த இதய மலர் எங்குமே கிடைக்கவில்லை. இனி உனக்கு தருவதற்கு என்னிடம் என் மனம் மட்டுமே உள்ளது" என்றான். "இதுதான் நான் விரும்பிய மலர்-இதய மலர். நீ அளித்தவை எல்லாம் என் சக்தியால் வளர்ந்தவை. என் சக்தியின்றி உனது கையைத் தூக்க உன்னால் முடியாது. உலகிலுள்ளவை அனைத்தும் என் படைப்பாகும். ஆனால் உனது படைப்பு ஒன்று உண்டு. "நான்" என்ற எண்ணம். அதைத்தான் எனக்கு சமர்ப்பிக்க வேண்டும். மனமே எல்லாவற்றையும் விட, நான் விரும்ம்பும் மலர்." என்று கூறினார் பகவான்..

Monday, April 5, 2010

மந்திரதீட்சை



மனத்தூய்மை தான் மந்திரதீட்சையின் முக்கிய நோக்கம். நம்முள்ளே இருக்கும் தெய்வீக சக்தி விழிப்படைய மந்திரதீட்சை உதவும். பிரம்மஞானியான குருவிடமிருந்து சக்தி வடிவமாகிய மந்திரம் சீடனின் இதயத்தில் செல்கிறது. மந்திரதீட்சையால் அகத்தூய்மை ஏற்படுகிறது. மந்திரத்தை திரும்பத் திரும்ப ஜபிப்பதால் சக்தி கிடைக்கிறது.

Sunday, April 4, 2010

மாதா அமிர்தானந்தமயிக்கு கெளரவ டாக்டர் பட்டம்


கொச்சி,ஏப். 1: ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்தமயிக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கெüரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள "ஸ்டேட் யூனிவர்சிட்டி ஆப் நியூயார்க்' பல்கலைக்கழகம் இந்த கெüரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது. உலகம் முழுவதும் அவர் ஆற்றி வரும் மனிதாபிமான சேவையைப் பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையின் தலைவர் பாரத் ஜெயராமன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் மே 25-ம் தேதி நடைபெறும் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.இந்த கெüரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் இந்தியர் மாதா அமிர்தானந்தமயி என்பது குறிப்பிடத்தக்கது.

164 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், இதுவரை உலக அளவில் 2 தலைவர்களுக்கு மட்டுமே கெüரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமா அதில் ஒருவர்.

அண்மையில் ஹைதியில் ஏற்பட்ட கடும் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டியவர்களில் மாதா அமிர்தானந்தமயியும் ஒருவர் என்று அமிர்த விஸ்வ வித்யா பீட பல்கலைக்கழக இணை வேந்தர் அபயஅமிர்தா சைதன்யா, துணை வேந்தர் வெங்கட் ரங்கன் ஆகியோர் தெரிவித்தனர்.

இறைவன் ஒருவரே.

இந்து மதத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களை வணங்குகிறோம். உண்மையில் இறைவன் ஒருவரே. இந்து மதம் இறைவன் ஒருவரே என்று நம்புவது மட்டுமல்லாமல், அந்த இறைவனைத் தவிர வேறு எதுவுமே இல்லை எனவும், எங்கும் நிறைந்திருக்கும் சைதன்யமே இறைவன் எனவும் கூறுகிறது. இறைவன் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர், இருந்தாலும், பக்தனுக்கு அருள் புரிவதற்காக அவர் எந்த வடிவத்தையும் எடுக்கவல்லவர். எந்த பாவத்தை வேண்டுமானாலும் வெளிப்படுத்தவல்லவர். காற்று இளந் தென்றலாக வரலாம், வேகமாக வீசலாம், புயல் காற்றாகவும் மாறலாம், அந்தக் காற்றையும் கட்டுப்படுத்தும் சர்வேஸ்வரனால் எந்த பாவத்தையும் மேற்கொள்ள முடியுமல்லவா? அவருடைய மகிமைகளை வர்ணிக்க யாரால் முடியும்?
ஒரே இறைவன் சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், துர்க்கை, காளி, சரஸ்வதி என பல நாமங்களிலும் பல வடிவங்களிலும் ஆராதிக்கப்படுகிறார். ஒவ்வொருவரின் விருப்பங்களும் வேறுபட்டவை. அவர்களது பண்பாடு, வளர்ந்த சூழ்நிலை போன்றவை மாறுபட்டவை. அவரவரின் விருப்பத்திற்கும், மனோபாவத்திற்கும் ஏற்ப இறைவனை எந்த வடிவிலும் வணங்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு. இதனால்தான் இந்து மதத்தில் இறைவனின் பல வடிவங்கள் தோன்றினவே அன்றி, அவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல

Saturday, April 3, 2010

சிந்தனைக்கதை: இரத்தின மோதிரம்

ஒருமுறை ஒரு திருடன் ஒரு மகாத்மாவின் வீட்டில் திருடச் சென்றான்.திருடன் மிகவும் ஏழை. அவனும், அவனது குடும்பத்தினரும் சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகிவிட்டன. அவனது நிலையை அறிந்து கொண்ட மகாத்மா திருடனை நோக்கி, "சும்மா நேரத்தை வீணாக்காதே. அலமாரியில் என் மனைவியின் விலை மதிப்புள்ள மோதிரம் இருக்கிறது. என் மனைவி உன்னைப் பிடிப்பதற்கு முன் அதை எடுத்துக் கொண்டு விரைவாக இங்கிருந்து ஓடிவிடு." என்றார். திருடனால் இதை நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்ட அவன், தான் கேட்டது உண்மையே என்று உறுதி செய்து கொண்டபின் அலமாரியை நோக்கி நடந்தான். அதிலிருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினான். அப்போது மகாத்மாவின் மனைவி அங்கு வந்தாள். மோதிரம் திருட்டுப் போய்விட்டது என்பது புரிந்ததும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். "ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள என் இரத்தின மோதிரத்தை யாரோ திருடி விட்டார்கள் " என்றாள். "அது அவ்வளவு விலை மதிப்புள்ளது என்று எனக்குத் தெரியவில்லையே!" என்று வியந்தார் மகாத்மா . உடனே திருடனின் பின்னால் ஓடினார். திருடனுக்கு முன்னால் சென்று நின்ற அவர், "நீ திருடிய மோதிரம் ஐயாயிரம் ரூபாய் விலை மதிப்புள்ளது. இதை நீ குறைந்த விலைக்கு விற்று விடாதே. இதைச் சொல்லவே உன் பின்னால் ஓடி வந்தேன்." என்றார்.
திருடனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது. அவன் தனது வாழ்வில் இதுவரை இது போன்ற அன்பை அனுபவித்ததில்லை. அந்த ஒரு நிமிடத்தில் அவனது வாழ்வே மாறிவிட்டது. அவன் நன்னடத்தை உள்ள மனிதனாக மாறி உழைத்து வாழ ஆரம்பித்தான்