Thursday, April 8, 2010



ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கே உரிய தனிச் சிறப்பு உண்டு. பாரதத்தின் சிறப்பும், உயர்வும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாகும். எடுப்பதில் அல்ல, கொடுப்பதில் தான் இன்பம்; அடைவதில் அல்ல; துறப்பதில் தான் ஆனந்தம் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து ஓதிய அவதாரங்களும், மகான்களும், ரிஷிகளும், முனிவர்களும் தோன்றிய புனித பூமி இது.
பாரதம் ரிஷிகளின் நாடு. உலகிற்கு எந்தக் காலத்திலும் நன்மையையும், புகழையும் அளிக்கும் பண்பாட்டையே ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். அந்தப் பண்பாடே நமக்கு அன்னை. அதை நாம் காப்பாற்றி வளர்க்க வேண்டும். "மாத்ரு தேவோ பவ (அன்னையைத் தெய்வமாக மதி) பித்ரு தேவோ பவ (தந்தையைத் தெய்வமாக மதி) ஆசார்ய தேவோ பவ (குருவைத் தெய்வமாக மதி) என்பதே நமது முன்னோர்கள் நல்கிய உபதேசம். இந்த அன்பு தான் சமூகத்தை ஒன்றாக இணைக்கும் சங்கிலி. அந்த சங்கிலி இன்று உடைந்து ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தீவாக மாறும் காட்சியையே நாம் இன்று கண்டு வருகிறோம்.
நம்முடைய பண்பாடும், நமது தாய்நாடும் நமக்கு அன்னை ஆவாள். அந்தப் பண்பாட்டுடன் நமக்குள்ள உறவை இழந்தால் நாம் நூலறுந்த பட்டம் போலாகி விடுவோம். பண்பாட்டை வளர்ப்பதும் தாய்நாட்டிற்கு சேவை செய்வதும் நம் அனைவரதும் தர்மமாகும். பண்பாட்டையும் தர்மத்தையும் வளர்ப்பதன் மூலம் அமைதியும், செழிப்பும் நிறைந்த ஒரு நாட்டை, ஒரு உலகத்தை உருவாக்க நம்மால் முடியும். இயற்கையின் சமநிலையை மீண்டும் நிலைநிறுத்த முடியும்.

No comments:

Post a Comment