Sunday, April 29, 2012

Friday, April 27, 2012


ஒரு பக்தர், ஆதிவாசிகளுக்குக் கல்வி கற்பிப்பதற்காக அடர்ந்த காட்டுக்குள் சென்றார். அப்போது, வழியில் காட்டு யானைகள் வரக்கூடும் என்று அவரை எச்சரித்தனர். அதற்கு அவர், "பரவாயில்லை எனக்கு என் குருவின் மீது நம்பிக்கை இருக்கிறது அவர் என்னைக் காப்பார்" என்று பதிலளித்தார். அவர் காட்டுக்குள் சிறிது தூரம் சென்றபோது, எதிரில் ஒரு காட்டுயானை வருவதைக் கண்டார். அதைப் பார்த்ததும் உயிரைக் கையில் பிடித்தபடி ஒரே ஓட்டமாய் திரும்பி ஓடினார். வீட்டை அடைந்த பிறகுதான் அவரது ஓட்டம் நின்றது. இதைக் கண்டவர்கள் "என்ன உனக்கு குருவின் மீது நம்பிக்கை போய்விட்டதா?"  என்று கேட்டனர்.  அதற்கு அவர் " எனக்கு குருவின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால், அந்த யானை மீது நம்பிக்கை இல்லை." என்று பதிலளித்தார். 
இதிலிருந்து நமது நம்பிக்கை எவ்வளவு பலமற்றது என்று புரிகிறது. நாம் மகிழ்வோடு வாழும்போது நமக்கு நம்பிக்கை இருப்பதாகக் கருதுகிறோம். ஆனால், கஷ்டம் வந்ததும் நம்பிக்கை காற்றோடு போய்விடுகிறது. 

Wednesday, April 25, 2012

Monday, April 23, 2012



கூட்டிக் கழித்து அன்பு காட்டும் மனித வாழ்க்கையில் கூட இருந்து காவல் கொள்ளும் தெய்வம் நீ அம்மா!!



Wednesday, April 18, 2012



பொங்கி எழுகின்ற துன்பத்தீயில் என் மனம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கிறது. தனியாய் இருந்து அழுகின்றேன். சாரமற்ற இந்த வாழ்க்கையின் உணர்வு மனதை பலவீனமாக்கிவிட்டது.  அம்மா நீ என்மீது காட்டிய  அளவற்ற கருணையையும், அன்பையும் நினைத்து நினைத்து  வாழ்கிறேன். எனக்கு ஆறுதல் தருவது அந்த இனிய நினைவுகள் மட்டுமே.  என் நினைவு, கனவு, நிஜம், உயிர் எல்லாமே நீதான் அம்மா! 

Tuesday, April 17, 2012



எங்கள் முன்னோர்கள், இன்று போல் மன அமைதிக்காக மனநல மருத்துவர்களை நாடியதில்லை. தங்கள் ஊரிலுள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டு, தனது குறையை இறைவனிடம் எடுத்துரைத்தால் போதும்;  மனம் லேசாகி விடும். கவலைகளும் பறந்து விடும். மருத்துவரின் உதவியோ, தூக்க மாத்திரையின் உதவியோ அவர்களுக்குத் தேவைப்படவில்லை. கந்தசஸ்டி கவசமோ, சிவபுராணமோ ஓதியபடியே உறங்கி விடுவர். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது முதுமொழி. கடவுள் நம்பிக்கை பாரத மக்களின் முழுமூச்சாக இருந்தது. ஆனால் இன்று அன்னியர் புகுத்திய ஆங்கிலக் கல்வித்திட்டத்தில் மதிமயங்கி, வாழ்வின் நோக்கம் நிலையற்ற செல்வத்தை தேடுவது என்றாகி விட்டது. "தேடிச் சோறு நிதம்  தின்று சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரை கூடி கிழப்பருவம் எய்தி கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை மனிதர்களால்"   ஆலயங்களையும், மத தத்துவங்களையும், ஆன்மீக குருமார்களையும் குறை கூறத்தான் முடியும்.  ஆலயங்களும், குருமார்களும்  சமூகத்திற்கும், தனி மனிதனுக்கும் பண்பாட்டு வளர்ச்சியை ஊட்ட எந்த அளவு ஆணி வேராகத் திகழ்கின்றனர் என்பதை காணத் தவறிவிடுகிறார்கள்.  

Monday, April 16, 2012



வேதங்களின் ஒவ்வொரு பகுதியை நான் எப்போது படித்தாலும் உலகிற்கு அப்பாற்பட்ட, அறிவுக்குப் புரியாத ஜோதி எனக்கு ஒளியூட்டுவதாக உணர்கிறேன்.  வேதங்களின் உயர்ந்த போதனைகளில் சமயப் பிரிவினையின் சாயல்கூட இல்லை. அவை எல்லாக் காலங்களுக்கும், தட்ப வெப்பப் பிரிவுகளுக்கும், நாடுகளுக்கும் உரியனவாகும். உன்னதமான ஞானத்தை அடைவதற்கான ராஜமார்க்கமாகும். அவற்றை நான் படிக்கும் போது கோடைகால இரவில் நட்சத்திரங்களின் ஒளிமயமான சொர்க்கத்திகுக் கீழே இருப்பது போன்ற உணர்வைப் பெறுகிறேன். ----ஹெஷ்ரி டேவிட் தொரேயு : அமெரிக்க சிந்தனையாளரும்,  எழுத்தாளரும்----

Thursday, April 12, 2012

Monday, April 9, 2012

யாருக்கு முதலிடம்?





அரசசபை கலைந்தது.  குரு வசிஷ்டரை வணங்கி விடைபெற்ற ஸ்ரீராமர் சீதையுடன் புறப்பட்டார்.  பின்னால் மெல்லிய காலடி ஓசை கேட்கவே இருவரும் திரும்பிப் பார்த்தனர். ஸ்ரீராமதாசனான ஹனுமன் கூப்பிய கரங்களுடன் தங்களைத் தொடர்வதை அவர்கள் கண்டனர். சீதாதேவியின் முகம் வருத்தத்தால் சுருங்கியது. சீதாதேவி ஸ்ரீராமரிடம் ஏதோ சொல்ல விரும்பினார். ஆனால், ஹனுமன் ஸ்ரீராமரை எப்போதும் நிழல் போல் பின்தொடர்ந்த காரணத்தால் அவரால் சொல்ல முடியவில்லை. சீதையின் முகமாற்றத்தை ஸ்ரீராமர் கவனிக்கத் தவறவில்லை. சீதை மெல்லிய குரலில், "நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஆனால் ஹனுமன் இருக்கும் காரணத்தால் என்னால் சொல்ல முடியவில்லை" என்றார்.  ஸ்ரீராமர், "சீதா!  உனக்கு அவனது பக்தியின் ஆழம் தெரியாது. ஒருநொடி கூட அவன் என்னைப் பிரிந்திருக்க மாட்டான். அவனது ஒவ்வொரு மூச்சிலும், பேச்சிலும், நினைவிலும் எனது நாமம் ஒன்றே நிறைந்து இருக்கிறது. அவனது அன்புக்கு, பக்திக்கு நான் அடிமை. என்னால் அவனிடம் இங்கிருந்து செல்லுமாறு கூற முடியும் என்று தோன்றவில்லை. முயற்சி செய்து பார்கிறேன்" என்றார்.
இதற்குள் அவர்களின் இருப்பிடம் வந்துவிட்டது. ஸ்ரீராமர் உள்ளே சென்று அமர்ந்தார். அவரது காலடியில் ஹனுமனும் அமர்ந்து கொண்டார். அருகில் நின்ற சீதை ஸ்ரீராமர் ஹனுமனிடம் என்ன சொல்ல போகிறார் என்பதை அறியும் ஆவலுடன் அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றார். 
ஸ்ரீராமர் ஹனுமனை நோக்கி "வாயு மைந்தா! இப்போதே நீ சென்று கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணியநதிகளின் நீரை கலசத்தில் எடுத்துக் கொண்டு வா" என்றார். "அப்படியே செய்கிறேன். தங்கள் சித்தம் என் பாக்கியம்." என்ற ஹனுமன் அங்கேயே அமர்ந்திருந்தார். இதைக் கண்டு வியப்படைந்த ஸ்ரீராமர்; "ஹனுமா! நான் ஏதேனும் பணி இட்டால் அடுத்த நொடியே அதை செய்ய முனைவதல்லவா உன் வழக்கம்?  அப்படியிருக்க, புண்ணிய நதிகளின் நீரை கொண்டுவருமாறு கூறி சில நிமிடங்கள் கடந்து விட்டன. நீ இதுவரை புறப்படவில்லையே?" என்று கேட்டார்.
ஹனுமன் "ஐயனே! தங்கள் வார்த்தையை நான் தட்டி நடப்பேனா?  தங்கள் ஆணைப்படி இதோ நீரைக் கொண்டு வந்து விட்டேன்" என்று கூறியபடி ஹனுமான்; தனது வாலை முன்புறமாக வளைத்து; மூன்று கலசங்களில் எடுத்துவந்த நீரை ஸ்ரீராமரிடம் ஒப்படைத்தார். (ஸ்ரீராமரை ஒருநொடி கூடப் பிரிந்திருக்க விரும்பாத அவர், ஐயனின் ஆணையைக் கேட்டதும் தனது வாலை மட்டும் நீட்டி  மூன்று   நதிகளின் நீரையும் கொண்டு வந்து விட்டார்)  ஹனுமனைக் கனிவுடன் நோக்கிய ஸ்ரீராமர், ஓரக்கண்ணால் சீதா தேவியின் முகமாற்றத்தைக் கவனித்தார். ஹனுமனின்   செயலைக் கண்டு பொறுமையை இழந்த சீதா, இனி இங்கு நிற்பதால் பயனில்லை என்று முடிவு செய்து அறையை விட்டு வெளியேற முயன்றார். 
அப்போது, "அம்மா சற்று நில்லுங்கள்" என்ற ஹனுமனின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்த சீதையிடம், "அம்மா, என்னைவிட என் ஐயனின் மனதில் தாங்கள் முதலிடம் பெறக் காரணம் என்ன?" என்று கேட்டார். சீதை தனது நெற்றியில் அணிந்திருந்த திலகத்தைச் சுட்டிக்காட்டி( அவரது மனைவியாக இருப்பதுதான் காரணம், என்பதை விளக்கும் வகையில்) ஒன்றும் பேசாமல் வெளியேறிவிட்டார். சீதாதேவி உணர்த்த முயன்றதை சரியாகப் புரிந்து கொள்ளாத ஹனுமன், " தேவி நெற்றியில்  அணியும் செந்தூரப் பொட்டுதான் அவர் ஸ்ரீராமரின் மனதில் முதலிடம் பிடிக்கக் காரணமா?" என்று எண்ணி வியந்தார். அதன் பின் மூன்று நாட்கள் ஹனுமனைக் காணவே இல்லை. மூன்றாவது நாள் அரசவையில் ஏதோ ஒரு முக்கிய விசயமாக ஆலோசனை சபை கூட்டப்பட்டது. ஆனால், ஸ்ரீராமரின் முகத்தில் ஏதோ நிழல் படிந்தது போன்ற தோற்றம். அவர் யாரையோ எதிர்பார்ப்பது போலிருந்தது. அமைச்சர்களில் ஒருவர் ஸ்ரீராமரிடம், "பிரபோ! அவையைத் தொடங்காமல் காலதாமதம் செய்வதன் காரணத்தை அறியலாமா?" என்று பணிவுடன் கேட்டார். அதற்கு ஸ்ரீராமர், " எனக்குப் பிரியமான ஹனுமன் இல்லாமல் இந்த அவையைத் தொடங்க நான் விரும்பவில்லை. மூன்று நாட்களாக அவனைக் காணவில்லை" என்றார். 
அப்போது அவையின் ஒரு மூலையிலிருந்து, "ஐயனே! நான் இங்குதான் இருக்கிறேன்" என்ற குரல் ஒலித்தது. அனைவரும் குரல் வந்த திசையில் நோக்கினர். அங்கே உடல் முழுவதும் செந்தூரம் பூசி நிற்கும் ஒரு உருவத்தைக் கண்டனர். அந்த உருவம் ஸ்ரீராமரின் அருகில் நெருங்கி, "ஸ்ரீராமச்சந்திர பிரபோ!  தங்கள் சந்நிதியிலிருந்து நான் எங்குமே போய்விடவில்லை. தங்கள் மனதில் பிராட்டியார் முதலிடம் வகிக்கக் காரணம் இந்தச் செந்தூரமே என்பதை அறிந்த நான் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டேன்" என்று தெரிவித்தார். 
பின்னர் ஸ்ரீராமரின் அருகில் வீற்றிருந்த சீதையை நோக்கி, "அம்மையே! இப்போது சொல்லுங்கள் நெற்றியில் மட்டும் செந்தூரம் அணிந்திருக்கும் உங்களுக்கா  அல்லது உடல் முழுவதும் செந்தூரம் அணிந்திருக்கும் எனக்கா பிரபுவின் இதயத்தில் முலிடம்?" என்று கேட்டார். 
ஹனுமன் ஸ்ரீராமரிடம் கொண்டுள்ள பக்தியின் உயர்வை அறிந்த சீதாப்பிராட்டி பேச்சிழந்தார். கண்களில் கண்ணீர் பெருக ஹனுமனை நோக்கி,  "குழந்தாய்! மனம் நிறைந்து சொல்கிறேன் என் தலைவனின் மனதில் உனக்கே முதலிடம்" என்று கூறி ஆசிர்வதித்தார். பிராட்டியின் மொழிகளைக் கேட்ட ஸ்ரீராமர் மகிழ்ச்சியுடன் புன்முறுவல் பூத்தார்.
ஒரு பக்தனின் தூய பக்திக்கு முன்னால் பகவான் தலை வணங்குகிறார். களங்கமற்ற பக்தனின் பக்தி வலையைக் கடந்து செல்ல அவரால் முடிவதில்லை. பக்தியின் சிறப்பு இதுதான்.
ஜெய் ஹனுமன்!

Thursday, April 5, 2012

Monday, April 2, 2012

              



இந்து மதத்தில் சாதிப்பிரிவினை இல்லை. வர்ண வேறுபாடே உள்ளது. ஹிந்து தர்மம் ஜாதிபேதத்திற்கு இடமளித்த தர்மமென்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. உபநிஷதங்களிலும், கீதையிலும் வர்ணங்களைப் பற்றியே விவரிக்கப்படுகிறது. ஒரு ஜீவாத்மா தனது தகுதிக்கு ஏற்ற ஒரு பிறவியை எடுக்கிறது. அப்படி எடுத்த பிறவியே வர்ணம் ஆகும். அது ஜீவாத்மாவின் மன அமைப்பிற்கேற்ப அதற்கு கிடைக்கும் சூழ்நிலைகளைக் காட்டுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணங்கள் ஜீவாத்மாவின் மனதின் குணங்களையே குறிப்பிடுகின்றன. தவத்தின் மூலம் தனது மனநிலையை மாற்றினால் ஒரே பிறவியிலேயே பிற வர்ணங்களில் இடம்பிடிக்க ஒருவருக்கு இயலும். புராண, இதிகாசங்களிலும், வரலாற்றிலும் இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. 

Sunday, April 1, 2012



பாரதத்தின் இதயத்தை அறிய வேண்டுமெனில் ராமாயணம், மகாபாரதத்தை தவிர வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. அவற்றின் காவிய நடையும், மிகப்பெரிய அளவும் ஒருவேளை இக்கால மனிதனை கவராமல் போகலாம். ஏனெனில், இக்கால மனிதன் நேரத்தை பணத்தால் அளக்கிறான். ராமாயணமும், மகாபாரதமும் பழம்பெரும் இதிகாசங்களாக பெருமை பெறுகின்றன. தர்மம், மோட்சம், அர்த்தம், காமம் ஆகியவற்றை உபதேசிப்பதும், முன்பு நடந்தவற்றைக் கதை வடிவில் தருவதும் எதுவோ அது இதிகாசம் எனப்படும். இந்த மகா காவியங்களை படிக்கும் போது பாரத மக்களின் பண்பாட்டைப் பற்றி அறியாத மனிதர்களுக்கு இதில் காணப்படுபவை எல்லாம் முட்களாகவே தோன்றும். இதனால் அவர்கள் இவற்றில் காணப்படும் மலர்களை காணும் வாய்ப்பை இழக்கக் கூடும்.