காலப்போக்கில் மனமேகுருவாக மாறிவிடுகிறது. மன ஒருமைப்பாடின்றி பல மணிநேரம் பிரார்த்தனை, தியானம் செய்வதைவிட இரண்டு நிமிடங்கள் முழுமையான ஒருமைப்பட்ட மனத்துடன் பிரார்த்தனை, தியானம் செய்வது நல்லது.
பிறர்மீது அன்பு காட்டும் மனிதர், நதியைப் போன்றவர். உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது. அன்புடைய மனிதரிடம் எல்லோரும் பழக விருப்பம் கொள்வர். அவருடன் உறவாடி இன்புறுவர். நதியில் அனைவரும் நீராடி மகிழ்வதைப் போல, அன்புடைய மனிதரும் எல்லாருக்கும் அன்பை வாரி வழங்குபவராக இருப்பார். அவரிடத்தில் அன்பு பிரவாகமாகிக் கொண்டே இருக்கும். சொர்க்கமும், நரகமும் நம் உள்ளத்தாலேயே உருவாக்கப்படுகின்றன. மனம் நிம்மதியின்றி இருக்கும் போது மகிழ்ச்சியான விஷயம் கூட நம்மை எரிச்சல் அடையச் செய்வதை அறிவோம். ஆனால், உள்ளத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிகொண்டிருக்கும் போது நம்மால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய இயலும். அதனால், புறவுலக நிகழ்ச்சிகள் நம் மனதின் போக்கிற்கேற்பவே நம்மை வழிநடத்திச் செல்கின்றன.---அம்மா----
சிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.
நூறு நல்ல காரியங்களை செய்தவர் ஒரே ஒரு தவறு செய்து விட்டாலும் மக்கள் அவரை வெறுப்பார்கள். அவரை நிராகரித்து விடுவார்கள். ஆனால் இறைவனோ நூறு தவறுகளைச் செய்தவன் ஒரேயொரு நல்லது செய்தாலும் அவன் மீது அன்பைச் சொரிந்து, அவனை ஏற்றுக்கொள்கிறார். இறைவனை மனமுருகி வேண்டுங்கள்.
நம் ஒவ்வொருவரையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார். நம் பிரார்த்தனைகளை அவர் செவிகள் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால், கடவுளிடம் மனப்பூர்வமாக உங்கள் பிரார்த்தனைகளை முன்வையுங்கள்.
வெப்பம்-குளிர், சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம் என்று இரு எதிரெதிர் குணங்கள் உலகில் இருக்கின்றன. இவ்விரு அனுபவங்களும் கடவுளை உணர்ந்த பின் நம்மை பாதிப்பதில்லை.