குண்டலினி சக்தி என்பது எல்லா உயிரினங்களிலும் இருக்கும் ஜீவசக்தி ஆகும்: இது முதுகெலும்பின் அடிப்பாகத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்பாம்பைப் போன்றது. இடைவிடாத தியானத்தாலும், குருவின் அருளாலும் இச்சக்தி விழிப்படைகிறது. அப்போது அது முதுகெலும்பில் உள்ள கழுமுனை நாடி வழியாக தலையில் இருக்கும் ஷஹஸ்ராரத்தில் உள்ள ஆண்பம்பைக் காணும் ஆவலில் மேலெழுந்து செல்கிறது. யோகத்தினால் ஏற்படும் உள்ளுணர்வின் வாயிலாக இதை அனுபவிக்கலாம். குண்டலினி சக்தி ஒரு ஆதாரத்தை அடைந்த பிறகு அந்த ஆதாரத்தை நன்றாக மலரச் செய்து செம்மைப்படுத்தி அடுத்த ஆதாரத்திற்கு செல்கிறது. குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரத்தை அடையும் பொழுதும் சாதகன் பல விதமான அனுபவங்களைப் பெறுகிறான். தெய்வீகமான அனுபவங்களும், ஆசையைத் தூண்டிவிடும் அனுபவங்களும் ஏற்படும். ஒரு சற்குருவின் மேற்பார்வை இல்லாத சாதகன் இந்த நிலைகளை மிக உயர்ந்தது, கடவுள் காட்சி கிடைத்துவிட்டது என்று தவறாக எண்ணி ஆன்மீகப் பாதையிலிருந்து வழுவலாம். இதனால்தான் சற்குருவின் கண்காணிப்பு ஒரு சாதகனுக்கு மிக அவசியம் என்று கூறப்படுகிறது.
குண்டலினி சக்தி ஒவ்வொரு ஆதாரங்களின் வழியாக மேலெழும்போது உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. உடல் முழுவதும் மிளகாயை அரைத்துத் தேய்த்தது போன்ற எரிச்சல் ஏற்படும். உடலில் அதிகமான வெப்பம் தோன்றும். அடிக்கடி மயிர்க்கூச்சல் எடுக்கும், வேர்வை கசிவது போல் உடலிலிருந்து நீர் கசியும், உடம்பு துரும்பாக இளைத்து விடும். இந்நிலையில் சாதகன் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். மிகவும் கவனமாக அவன் கண்காணிக்கப்படவேண்டும். நேரான வழவழப்பான பலகையில் படுக்க வேண்டும். ஒரு சிறு அடி கூட படக்கூடாது. அது பெரிய கெடுதலை ஏற்படுத்தும். குண்டலினி சக்தி விழிப்பு அடைந்துவிட்டால் சாதகன் மிகவும் பொலிவு பெறுவான். மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களைக் கடந்து குண்டலினி கடைசியாகத் தனது உண்மை இருப்பிடமான ஷஹஸ்ராரத்தை அடைகிறது. அப்போது உடலில் புத்துணர்வு ஏற்பட்டு, உடல் முழுவதும் குளுமையும், அமுத மழையும் பொழிகிறது. பழைய உடல் ஆன்மீக சக்தி நிறைந்த புதிய உடலாக மாறுகிறது.

No comments:
Post a Comment