அன்பு நிறைந்த வசைச் சொற்கள் நறுமணமுள்ள, மென்மையான மலரால் அடிப்பது போன்றதாகும். கடினமான வசைச் சொற்கள் கல்லால் அடிப்பது போன்றதாகும்.
உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட மனத்தால் சரியான அன்பையும், கபடமான அன்பையும் வேறுபடுத்தி அறிய முடியாது.
வேதனையில் ஆழ்ந்துள்ள மனதைக் குளிரச் செய்ய அன்பால் தான் முடியும், மாறாக, அன்பின்மையானது பொதுவாக மனங்களை வேதனையில் ஆழ்த்துகிறது.
அன்பு கிடைப்பதற்கு மிக எளிதான வழி அன்பைக் கொடுப்பதுதான். அன்பு கிடைக்காவிடிலும் கொடுப்பவர்களே உயர்ந்தவர்கள்; அன்பு கிடைத்தாலும் அதைத் திருப்பிக் கொடுக்காதவர்கள் கடின இதயம் படைத்தவர்கள் ஆவர்.
குழந்தைகள், பூந்தொட்டியில் உள்ள சிறிய செடிகளைப் போன்றவர்கள். அன்பெனும் நீரை இடையிடையில் பாய்ச்சாவிட்டால் அவர்கள் வாடி வதங்கிப் போய்விடுவார்கள்.
துருப்பிடித்து அசைக்க முடியாத இணைப்பு பாகங்களில் எண்ணெய் ஊற்றி மெல்ல மெல்ல செயல்படச் செய்வது போல் மாறுபட்ட கருத்துக்களால் மரத்துவிட்ட மனித உறவுகளை அன்பெனும் எண்ணெய் ஊற்றி மெல்ல மெல்ல புத்துயிரூட்டலாம். மனித உறவுகளில் அன்பே எண்ணெயாகும். அன்பு இல்லாவிடில் உறவுகள் உலர்ந்து போகும்.
அனைவரும் அன்பை விரும்புகின்றனர். அது கொடுக்கக் கொடுக்க வற்றாத நிதியாகும். அருந்த அருந்த திகட்டாத தேனாகும். அன்பே அகில உலகின் சாரமாகும்.


No comments:
Post a Comment