Wednesday, February 17, 2010

ஆண்-பெண் சமத்துவம் : அம்மாவின் அருளுரை


பழங்காலத்தில் ஆண்கள் ஒருவழிப் பாதையைப் போல் இருந்தார்கள். அப்படி ஆகாமல், அவர்கள் ஒரு நெடுஞ்சாலையைப் போல் ஆகவேண்டும். பெண்கள் முன்னேறுவதற்கு வசதியாக பாதை அமைத்துக் கொடுப்பது மட்டுமல்ல, வழிவிட்டுக் கொடுக்கவும் முன்வர வேண்டும். ஆண்களுக்கு பெண்களைவிட தசையும், உடல் பலமும் அதிகம் உண்டு. ஆனால் அந்த பலத்தை உபயோகித்து பெண்களை கீழ்ப்படுத்தாமல், அவர்களுக்கு உதவ வேண்டும்.



பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர் பதவிகளை அளிப்பதைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும். சமத்துவம் என்பது அதிகாரம் மற்றும் பதவியால் வருவதல்ல, அது இதயம் சம்பந்தப்பட்டதாகும். அது ஒரு மனோபாவமாகும். ஆணும்-பெண்ணும் புத்திக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே இதயத்திற்கும் முக்கிய இடமளிக்க வேண்டும். இதயத்தையும், புத்தியையும் இணைத்து செயல்படுத்தவும், ஒருவர் மற்றவருக்கு நல் உதாரணமாக அமையவும் முயற்சிக்க வேண்டும். அப்போது சமத்துவமும், இசைவும் இயல்பாக வந்து சேரும்.

வெளிப்படையாக யாரும் யாருக்கும் சமமாக முடியாது. கோழியால் சேவலைப் போல கூவ முடியாது. அதேசயமம், சேவலால் முட்டை இட முடியுமா? ஆனால், வெளிப்படையான வேறுபாடுகள் இருந்த போதிலும், மனதால் ஆணும், பெண்ணும் ஒன்றாக முடியும். மின்சாரமானது குளிர்சாதனப் பெட்டியின் மூலம் குளிர்ச்சியாகவும், ஹீட்டரின் மூலம் வெப்பமாகவும், மின் விளக்கின் மூலம் ஒளியாகவும் வெளிப்படுகிறது.

தொலைக்காட்சியின் இயல்பு மின் விளக்கிலோ மின் விளக்கின் இயல்பு தொலைக்காட்சியிலோ காணப்படுவதில்லை. குளிர்சாதனப் பெட்டி ஹீட்டரின் இயல்பையே, ஹீட்டர் குளிர்சாதனப் பெட்டியின் இயல்பையோ வெளிப்படுத்த முடியாது. இருப்பினும், எல்லா உபகரணங்களின் மூலமும் செயல்படும் மின்சாரம் ஒன்றாகும். அதுபோலவே, வெளிப்படையான வேறுபாடுகள் ஆண்-பெண்ணுக்கு இடையில் காணப்பட்டாலும், அவர்களுக்குள் குடியிருக்கும் ஆத்ம சைதன்யம் (இறையுணர்வு) ஒன்றே ஆகும்.

இயற்கையிலுள்ள அனைத்திற்கும் அவற்றிற்கே உரிய இடம் உண்டு. பொருளற்றதாக எதுவுமில்லை. அனைத்திலும் சைதன்யம் உண்டு. ஒரு பொருள் சிறியதாயினும், பெரியதாயினும் அவற்றிற்கே உரிய தனித்தன்மை உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கதிரவனில் வெப்பமும், கடலில் அலையும், காற்றில் குளிர்ச்சியும் இருப்பது அவற்றின் இயல்பாகும். மானிற்கு சாந்த குணத்தையும், சிங்கத்திற்கு கொடிய குணத்தையும் அளிப்பது இந்த அடிப்படை இயல்பே ஆகும். அதேபோல், ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுக்கே உரிய இயல்பு உண்டு. அதுவே ஒவ்வொருவரையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இதை மறந்துவிட்டு ஆணும், பெண்ணும் செயல்படக்கூடாது.

ஆண்களைத் தோல்வியுறச் செய்யும் முயற்சியில், பெண் தனக்குக் கிடைத்துள்ள தாய்மை எனும் வரப்பிரசாதத்தை மறந்து, புகைபிடிக்கவும், மதுவருந்தவும் செய்தால், அது அவளுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். இதனால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
பெண்களை விட ஆணோ, ஆணைவிடப் பெண்ணோ மேலானவர் அல்ல. படைப்பில், யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் இல்லை என்பதே உண்மையாகும்.

மேன்மையான இடத்தை இறைவனுக்கு மட்டும் அளித்து, ஆணும், பெண்ணும் அந்த ஒப்பற்ற சக்திக்கு சேவை செய்யும் வெறும் கருவிகளாக மாறவேண்டும். இந்த மனோபாவத்திலிருந்து தான் ஆண்-பெண்ணுக்கிடையில் சரியான சமத்துவம் உருவாகிறது

No comments:

Post a Comment