Monday, January 24, 2011

இறைவனின் அலங்காரம்


"அதரம் மதுரம், நயனம் மதுரம், வதனம் மதுரம், ஹசிதம் மதுரம், ஹ்ருதயம் மதுரம், கமனம் மதுரம், மதுராதிபதே அகிலம் மதுரம்" இவ்வாறு இறைவனோடு சம்பந்தப்பட்ட அனைத்திலும் பக்தன் இறைவனைத் தரிசிக்கிறான். இறைவனை அலங்கரித்து ஐம்புலன்களினால் இறைவனை வழிபடல் பக்தி மார்க்கத்தில் மிகச் சிறந்த முறை. கண்களால் இறைவனின் வடிவைக் காணல், காதுகளால் இறை நாமங்களைக் கேட்டல், நாவால் நைவேத்தியத்தைச் சுவைத்தல், விபூதி அணிதல், இறைவனுக்குப் பூஜை செய்த பொருட்களின் நறுமணத்தை நுகர்தல் என மனதையும், ஐம்புலன்களையும் இறைவனிடம் ஒருமுகப்படுத்த இவை அனைத்தும் உதவுகின்றன. ஆண்டிக் கோலத்திலாயினும் சரி, அரச கோலத்திலாயினும் சரி அவர் முழுமையானவர். நம் சந்தோசத்திற்காக நம்முடைய மன நிலைக்கேற்றவாறு இறைவனை அலங்கரிக்கிறோம். அவர் நம்முடைய கற்பனைகளுக்கு கட்டுப்படுபவர் அல்ல. இறைவனே அனைத்துமாவார். நாம் அவரை அலங்கரித்தாலும், அலங்கரிக்காவிடிலும் அவரின் அழகில் எந்தவித மாற்றமுமில்லை.
புறப் பொருட்களில் அழகைக் காணும் நம் முயற்சி ஜீவன் முக்தி நிலை வரை தொடரும். எங்கும் அழகைத் தேடுவோம். இறைவன் அழகின் முழுவடிவமானவன். அந்த இறைவனை அழகுபடுத்திக் காண விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? இறைவன் எங்கும் நிறைந்த சைதன்யமாவார். தன் அகமும், புறமும் இறைவன் நிறைந்திருக்கிறார் என்பது பக்தனுக்குத் தெரியும். இருந்தாலும் அவருடைய அழகிய வடிவத்தைக் கண்களால் காணவும், அந்த அழகை ரசிக்கவும் பக்தன் விரும்புகிறான்.


No comments:

Post a Comment