Monday, May 3, 2010

மதமாற்றம் அவசியமா?
மதங்கள் மனிதனின் படைப்பாகும்: ஒரு மதத்தையும் ஸ்ரீராமரும்; ஸ்ரீகிருஷ்ணரும், கிறிஸ்துவும் உருவாக்கவில்லை. ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த, வேறுபட்ட நிலையிலிருந்த மக்களை முன்னேற்றுவதற்கு அங்கங்கே தோன்றிய மகான்களினாலும், அவதாரங்களினாலும் அருளப்பட்ட உபதேசங்களை பின்பற்றிய சீடர்களே பிற்காலத்தில் அவற்றை ஒவ்வொரு மதமாக உருவாக்கினர். மக்களின் கலாச்சாரங்களும், தேவைகளும் வேறுபட்டவையாக இருந்த காரணத்தால் பல மதங்கள் தோன்றின.ஒவ்வொரு மதமும் அதற்கே உரிய தனித்தன்மையுடன் திகழ்கிறது. பொருளற்ற மதம் என்று எதுவும் இல்லை. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், அனைவரையும் "எனது" மதத்தில் சேர்க்கவேண்டும் என்ற பகுத்தறிவற்ற சிந்தனை நம் மனதிலிருந்து அடியோடு நீங்கிவிடும்.
ஆன்மிகமே மதத்தின் உயிர்நாடி. ஆசாரங்களும், நம்பிக்கையும் அதன் மேல்தோலாகும். ஆன்மிகம் என்பது ஒவ்வொருவரும் "நான் யார்" என்பதை உணர்வதாகும். தன்னை அறிபவனே உண்மையான மதநம்பிக்கை உள்ளவன். தன்னை அறியும் ஆன்மிகப் பாதையில் முன்னேறுபவன் மத ஆசாரங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபகிறான். நாம் அனைவரும் ஒரே மெய்ப்பொருளே. அது சாந்தியாகும்; அன்பாகும். அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றே. இங்கே பயம், வெறுப்பு, போட்டி ஆகியவை தேவையே இல்லை. வேறுபாடுகள் எல்லாம் மேல்மட்டத்தில் காணப்படுபவை. மெய்ப்பொருளை அறிந்தவர் மனதில் வேறுபாடுகள் எதுவும் இல்லை. வேறுபாடுகள் காணப்படும் இடத்தில் ஆத்மானுபூதி இல்லை. மனிதனின் மனம் மதம் என்னும் பிணைப்பிலிருந்து விடுபடுகிறது. மதம் எதுவாக இருப்பினும், ஆன்மிக தத்துவங்களை புரிந்துகொண்டால் அந்த மதத்தை அனுஷ்டித்தவாறே யாரும் இலட்சியத்தை அடைய முடியும். உதாரணமாக கிருஷ்ணனை வணங்கினாலும், கிறிஸ்துவை வணங்கினாலும், அல்லாவை வழிபட்டாலும் அனைத்திலும் அடிப்படையில் பக்தி மார்க்க தத்துவமே பின்பற்றப்படுகிறது. நாம ரூபங்கள் முக்கியம் அல்ல. இதயத் தூய்மையும், சமர்ப்பண மனோபாவமும் தான் முக்கியம்.
மெய்ப்பொருளை அறிவதற்கு ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் பாதையைப் பின்பற்றும் உரிமையும், சுதந்திரமும் உண்டு. ஒருவரின் நம்பிக்கையைக் குலைப்பது மிகப்பெரிய பாபமாகும். ஒருவரின் நம்பிக்கையைக் குலைத்தால் பின் அவரிடத்தில் மற்றொரு நம்பிக்கையை வளர்ப்பது எளிதான செயலல்ல.அறியாமை மற்றும் தவறாகப் புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பாதையைத் தேர்ந்தெடுப்பது கூடாது. அதற்கு முதலில் அவரவர் பிறந்து, வளர்ந்த மதத்தைப் பற்றிய அறிவும், ஆன்மிகம் என்றால் என்ன என்ற அறிவும் தேவை. தூண்டுதலாலோ, பேராசையாலோ மதம் மாறும் பலரால் பழைய நம்பிக்கைகளை முற்றிலும் கைவிட முடிவதில்லை. அவர்கள் மனதில் குற்ற உணர்வு உண்டாகும். பழைய மத நம்பிக்கை குலைந்தும், புதிய மத நம்பிக்கை உறுதியற்றும் இருக்கும். அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குடும்பங்கள் சிதைந்து போகின்றன. மெய்ப்பொருளை அறிவதற்கான பாதைகள் என்ற நோக்கத்துடன் ஆரம்பித்த மதங்கள் பின்னர் இயக்கங்களாக மாறிய போது, இயக்கத்தின் வலிமையைக் காப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. மதத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. தங்கள் அதிகாரம், தலைமை ஆகியவற்றை நிலை நிறுத்துவதற்கு உரிய ஸ்தாபனங்களாக இயக்கங்கள் மாறிவிட்டன. அவர்கள் மதத்தின் தத்துவங்களுக்கு தங்கள் விருப்பப்படி விளக்கமளித்தனர். பெரும்பாலும் அவற்றைப் பிறர் மீது திணிக்க முயன்றனர்.
இவ்வாறு மனிதனை முக்தியை நோக்கி அழைத்துச் செல்வதற்காக தோன்றிய மதங்கள் அவனைப் பிணைக்கும் சங்கிலியாக மாறிவிட்ட காட்சியையே நாம் காணுகின்றோம். உலகில் சாந்தியையும், சமாதானத்தையும் வளர்க்க வேண்டிய மதங்களே உலகில் ஏற்பட்ட பல போருக்கும், போராட்டங்களுக்கும் காரணமாக அமைந்தன.
நாம் எந்த மதத்தை நம்புகிறோமோ அதில் இருந்தவாறே ஆன்மிகத்தில் முன்னேற முயற்சி செய்ய வேண்டும். பிறரையும் அவர்கள் விருப்பப்படி நடந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அது தான் தார்மீகமான முறை. கிறிஸ்து, "உன்னைப் போல் உன் அயலானையும் நேசி." என்றே உபதேசித்தார். அதை வாழ்வில் பின்பற்றினால் சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் பல நீக்கி விடும். அயலானான கிறிஸ்தவனை மட்டும் நேசிக்க வேண்டும் என்று கிறிஸ்து கூறவில்லை. அயலான் என்பதில் எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். இதைப் புரிந்துகொள்ளும் அளவு பரந்த மனம் இல்லையெனில் மதத்தால் பெறும் பயன் தான் என்ன? நாமனைவரும் மதங்களின் இதயமாக உள்ள நோக்கத்தை அறிந்து, அன்பு, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை எனும் புதுயுகத்தை நோக்கிக் காலெடுத்து வைக்கவே இனி முயற்சிக்க வேண்டும்.
இந்து மதம் யாரையும் எதிர்ப்பதில்லை. யாரும் தங்கள் மதத்தையோ, நம்பிக்கையையோ விட்டுவிட வேண்டுமென்று கூறவுமில்லை. அது மட்டுமல்ல,ஒருவரது நம்பிக்கையைக் கெடுப்பதை அதர்மமாகவும் அது கருதுகிறது. எல்லா மதங்களையும் ஒரே இலட்சியத்தை அடைவதற்கான பலவித மார்க்கங்களாகவே அது கருதுகிறது. சனாதன தர்மம் வாழ்வின் முழுமையான நிர்வாகவியல் சாஸ்திரமாகும்.அது மனித குலத்தின் ஆன்மிக நலனிற்கும், மற்றும் உலகியல் நலனிற்கும் வழிவகுக்கும்.

No comments:

Post a Comment