'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன்.
ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.

No comments:
Post a Comment