நாட்கள் நகர்கின்றன. உன் நினைவுகள் கூடிக் கொண்டே போகிறது. வருடங்கள், மாதங்கள் போனாலும் அழியாத உன் நினைவுகளில் பேரின்பம் கண்ணா! உன்மேல் கொண்ட ஆழ்ந்த அன்பினாலும், நீ என்னைத் தேடி வருவாய் என்ற நம்பிக்கையிலும் தான் உயிர்ப்புடன் வாழ்கிறேன் கண்ணா!
உன் அன்பெனும் இனிமையை உணர்ந்தேன் கண்ணா! கனவா, நிஜமா புரியவில்லை. எதுவோ இந்த நொடியில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய் என்ற நிம்மதியோடு இருக்கிறேன். நீ எங்கோ இருந்தாலும் நானும், நீயும் இதயத்தின் மொழியில் நிறையவே பேசிக்கொண்டிருக்கிறோம். ...முடிவில்லாமல் தொடர்கிறது எங்கள் உரையாடல்.... . .கொட்டும் பனியின் கடும் குளிரிலும் உன் அன்பின் மென்மையும், இனிமையும் என்னைச் சூழ்ந்துள்ளது .பேரானந்தம்....கண்ணா! ... உன்னை நினைத்தாலே பரவசம். கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எண்ணமெல்லாம் நீயாக நிற்கின்றாய் கண்ணா! உன் நினைவுடனே என் உயிர் பிரிந்து விட வேண்டும். இதைவிட வேறு ஆசைகள் எனக்கு இல்லை கண்ணா!
நான் அழுவதை பார்த்துக் கொண்டு கல்லாக இருப்பது உனக்கொன்றும் புதிதில்லையே...இப்படியே கல்லாகவே இரு... உன் மௌனத்தை கலைத்து விடாதே கண்ணா! நீ என்னை ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தாலும், எவ்வளவு காயப்படுத்தினாலும் நான் உன்னைக் காண தவமிருக்கிறேன். எந்த பிறவியிலாவது உன்னைக் காண்பேன்..நான் உன்மேல் கொண்ட பேரன்பின் சக்தி என்னை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் கண்ணா!

No comments:
Post a Comment